மனம் செய்யும் மாயம்


மனம் செய்யும் மாயம். ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும், மனதால் மாற்றிவிட முடியும். இவற்றைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனதால் மாற்றிவிட முடியும்.

ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளைச் சாப்பிட்டால் அரிப்பு உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் உண்டாகும், பழங்களைச் சாப்பிட்டால் சளி உண்டாகும், இந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு பிடிப்பு உருவாகும், அதைச் சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதைச் சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், என்பன போன்ற செய்திகளை வாசித்து; அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால்; அந்த உணவைச் சாப்பிடும் போதெல்லாம் உடலில் நம்பிக்கைக்கு ஏற்ப தொந்தரவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இயற்கையின் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப சில நோய்கள் உருவாகும், வயதுக்குத் தகுந்த சில நோய்கள் உருவாகும், என்பதைப் போன்ற தகவல்களை வாசிக்காதீர்கள், வாசித்தாலும் அல்லது யாராவது கூறினாலும் அவற்றை நம்பாதீர்கள்.

வயது அதிகரிக்கும் போது நோய்கள் உருவாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல்திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கும் என்பதும் வெறும் அனுமானங்கள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் என்பதைப் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும்; ஒரு நோய் உண்டானால், அதைத் தொடர்ந்து புதிய நோய்கள் உருவாகும் என்று நம்புவோருக்கும்; பல நோய்கள் எளிதில் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் முக்கியக் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால், உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கிவிடும். அதனால் மருத்துவக் குறிப்புகள் என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

எந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடக் கூடாது, சிந்தித்து ஆராய்ந்த பின்புதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top