நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள் - 1
அனுபவம்
0
Comments
நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள். நான் பல்வேறு வகையான தொந்தரவுகள், பல்வேறு வகையான நோய்கள் உள்ளவர்களைச் சந்தித்திருக்கிறேன், சில வினோதமான நோய் உள்ளவர்களைக் கூட சந்தித்திருக்கிறேன். நோய்கள் பலவாக இருந்தாலும் அவர்கள் அனைவரிடத்திலும் ஒரு ஒற்றுமையைக் காணமுடிந்தது, அதுதான் மனதளவில் பயம். இந்த பயம் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர்களின் நோய்கள் குணமாகாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான், அது அவர்களின் பயம்.
நோயாளிக்குப் பயத்தை உண்டாக்கியது அவரின் மருத்துவர்களாக இருக்கலாம், குடும்ப உறுப்பினராக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், தொலைக்காட்சியாக இருக்கலாம், பத்திரிக்கையாக இருக்கலாம், வாட்ஸ்அப், அல்லது இணையச் செய்தியாகக் கூட இருக்கலாம்.
பயத்தை விதைத்தது யாராக இருந்தாலும் அந்த பயத்தை சுமந்துக் கொண்டிருப்பது நோயாளிதானே? பயத்தை விட்டு குணம் பெறுங்கள் என்றால் நம்ப மறுக்கிறார்கள். பல நோயாளிகளிடம் நான் கண்ட ஒற்றுமை என்ன வென்றால், உங்கள் நோய் குணமாகும் என்று நான் கூறும்போது, அதை நம்ப மறுக்கிறார்கள், அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி குணமாகும் என்றால் துளியும் நம்புவதில்லை, கடவுளே சொன்னாலும் கூட நம்பமாட்டார்கள் போலும். அந்த அளவுக்குப் பயம் அவர்களைக் கவ்விக் கொண்டிருக்கிறது.
அவர்கள் கண்களின் முன்பாகவே நாயும் பூனையும் எந்த மருந்து மாத்திரையும் இன்றி நோய்களை தானே குணப்படுத்திக் கொள்கின்றன. வாகனங்களில் அடிபட்டு எலும்புகள் முறிந்த விலங்குகள் கூட தன்னை தானே குணப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவற்றைக் கண்கூடாகக் கண்ட பிறகும் மனிதர்களுக்கும் இது சாத்தியம், எல்லா நோய்களும் தானே குணமாகும் என்பதை மட்டும் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள், வேடிக்கை மனிதர்கள். எதைப் பார்த்தாலும் பயம்.

Post a Comment