உறுப்புகள் பேசுவதை கவனிக்க வேண்டும்
ஆரோக்கியம்
0
Comments
உறுப்புகள் பேசுவதை கவனிக்க வேண்டும். உங்கள் முகத்தில் இருக்கும் கண், காது, மூக்கு, வாய், போன்ற உறுப்புகளோ; உடலில் மேலிருக்கும், கை, கால் போன்ற உறுப்புகளோ; உடலின் உள்ளே இருக்கும் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், போன்ற உறுப்புகளோ; அல்லது நெஞ்சு, கழுத்து, இடுப்பு, மூட்டு, போன்ற உடலின் பாகங்களோ, இருப்பதை உங்களால் உணர முடிந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உடலின் உறுப்பை உங்களால் உணர முடிந்தால், உங்களால் உணர முடிகின்ற உறுப்பில் ஏதோ ஒரு பாதிப்பு உண்டாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, உங்கள் உடலில் இருக்கும் உறுப்புகளை; அதாவது கண், காது, மூக்கு, வாய், கை, கால், இருதயம், வயிறு, இடுப்பு, போன்ற உறுப்புகள் இருப்பதை இயல்பான நேரங்களில் உங்களால் உணர முடியாது.
அதாவது, நீங்கள் ஒரு பொருளை கையில் தூக்குகிறீர்கள் என்றால் இந்தப் பொருளை தூக்குகிறேன் என்ற உணர்வு இருக்கும். உங்கள் தோளின் ஏதாவது ஒரு பொருளை வைத்தால், இந்த பொருள் என் தோளின் மீது இருக்கிறது என்ற உணர்வு இருக்கும்.
இதைப் போன்ற எந்த செயலும் செய்யாத நேரங்களில் என் உடலில் கை இருக்கிறது, கால் இருக்கிறது, மற்ற உடல் உறுப்புகள் இருக்கின்றன, என்று எந்த உணர்வும் யாருக்கும் இருக்காது. உடல் உறுப்புகள் அனைத்தும் இயல்பாக இயங்கும்போது, எந்த உணர்வையும் நமக்கு உண்டாக்காது.
இயல்பாக இயங்கும் உறுப்புகள், தன் இயல்பு மாறும்போதும், உறுப்பில் பாதிப்பு உண்டாகும் போதும் மட்டும் அந்த உறுப்பு இருக்கிறது என்ற உணர்வை மனிதர்களுக்கு உண்டாக்கும்.
உதாரணத்திற்கு அதிகமாக உணவை உட்கொள்ளும் பொழுது வயிறு பாரம், உப்புசம், உண்டாகி வயிறு என்ற உறுப்பு இருக்கிறது என்று உங்களுக்கு உணர்த்தும். மலச்சிக்கல் உண்டாகும் போது அடி வயிறு கடுத்து குடல் இருக்கும் உணர்வை உங்களுக்கு உண்டாகும். கை கால்களுக்கு அதிக வேலை கொடுக்கும் போது அதில் வலி உண்டாகி கை கால், இருக்கிறது என்ற உணர்வு உண்டாகும்.
இது போல் தான் ஒவ்வொரு உறுப்பும், அதில் பாதிப்பு உண்டாகும் போது நான் இருக்கிறேன் என்ற உணர்வை உண்டாகும். இதனால் உங்கள் உடல் உறுப்பை உங்களால் உணர முடிந்தால், அதில் வலி, வேதனை, சோர்வு, கணம், போன்ற ஏதாவது ஒரு உணர்வு உருவானால் அந்த உறுப்பில் ஏதோ ஒரு பாதிப்பு அல்லது பலவீனம் உருவாகி இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment