மனிதர்களின் மனம் மற்றும் மூளை


மனிதர்களின் மனம் மற்றும் மூளை. ஒவ்வொரு தனிநபரின் மூளை மற்றும் மனதின் தன்மையும் திறனும் மாறுபட்டு இருக்கும். எந்த இரு நபருக்கும் மனமும் மூளையும் ஒரே தன்மையுடனும் இயல்புடனும் இருப்பதில்லை.

மனிதர்களின் அறுபது விழுக்காடு (60%) மனதின் பதிவும் தன்மையும் இளம் வயதில் குடும்பம், பள்ளிக்கூடம், மற்றும் சமுதாயத்தில் கிடைத்த அனுபவங்களின் மூலமாக உருவாகின்றன. முப்பது விழுக்காடு (30%) மனதின் பதிவும் தன்மையும் சுய இயல்பு மற்றும் தனித்தன்மையின் காரணமாக உருவாகின்றன. சுயமாக கற்றுக்கொள்ளும் தன்மையால் உருவாகும் இவற்றை புத்திக்கூர்மை என்றும் கூறலாம். பத்து விழுக்காடு (10%) மனதின் பதிவும் தன்மையும் பிரபஞ்ச அறிவு. இவை பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கின்றன, இவற்றை பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல் என்று கூறலாம்.

மனிதர்களின் மனதையும் மூளையையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக ஒரு அனுபவம் எனக்கு அமைந்தது. நான் எழுதிய ஒரு மின்னூலுக்கு எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை சரி பார்க்கச் சொல்லி எனது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டேன். அதை ஐந்து நபர்கள் சரிபார்த்து அவர்கள் கண்டுகொண்ட பிழைகளை என்னிடம் தெரிவித்தார்கள். 

அதில் என்னை ஆச்சரியப்பட வைத்த விசயம் ஒன்று இருந்தது. அந்த நூலில் பதினைந்து பிழைகள் இருந்தன என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் ஆறு பிழைகளை அனைவரும் கண்டு கொண்டார்கள், நான்கு பிழைகளை ஒரு சிலர் மட்டும் கண்டு கொண்டார்கள், ஓரிரு பிழைகளை ஓரிரு நபர்கள் தனித்தனியாக கண்டு கொண்டார்கள். ஆனால் அந்த நூலில் இருந்த ஒரு சில பிழைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்கள் அனைவரும் வாசித்தது ஒரே மின்னூலைத் தான், எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு தனிநபரின் மூளை மற்றும் மனதிற்கு ஏற்றவாறு அவர்கள் கண்டுபிடித்த தவறுகள் மாறுபட்டன. அதனை அவர்களின் மனம் பார்க்கும் விதமும், மூளை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் விதமும், மாறுபட்டன.

மனதின் பதிவுகள் மற்றும் மூளையின் தன்மைக்கு ஏற்ப அறிவுத்திறன் மாறுபடுவதால், அவர்கள் சுட்டிக்காட்டிய பிழைகளும் தவறுகளும் மாறுபட்டன.

To Top