யார் நல்லவன் – யார் கெட்டவன்?
யார் நல்லவன் – யார் கெட்டவன்? என்ற கேள்விக்கு ஒரு அறிஞர் கூறிய பதில். “எவரொருவர் தனக்குள் உதிக்கும் எண்ணங்களையும், தான் செய்த செயல்களையும் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி யார் எப்போது கேட்டாலும் வெளியில் சொல்ல முடிகிறதோ” அவர் நல்லவர். “எவருக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத எண்ணங்கள் தோன்றுகிறதோ, எவரெல்லாம் வெளியில் சொல்ல முடியாத செயல்களைச் செய்கிறார்களோ” அவர்கள் கெட்டவர்கள்.
இன்றைய மனிதர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதை தன்னுடைய சுய நலத்திற்கு ஏற்பவே முடிவு செய்கிறார்கள். தனக்குப் பிடித்த விசயம் சரியோ தவறோ அதைச் செய்பவர்கள் நல்லவர்கள். தனக்குப் பிடிக்காத விசயம் எவ்வளவு நன்மையானதாக இருந்தாலும் அதைச் செய்பவர்கள் கெட்டவர்கள். அவ்வளவு தான் இன்றைய மனிதர்களுக்குப் புரிந்த தர்மம்.
தர்மம் என்ற சொல்லைக்கூட பிச்சை என்று தான் பலர் எண்ணுகிறார்கள். தர்மம் என்றால் அறம், எந்த ஒரு எண்ணமும் செயலும் யாராவது ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்திற்கோ, இயற்கைக்கோ பயனுள்ளதாக அமைந்தால் அது தர்மம். எந்த ஒரு எண்ணமும் செயலும் பிற மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்திற்கோ, இயற்கைக்கோ பாதகமாக அமைந்தால் அது அதர்மம்.
தர்மத்தைப் பேணி நடப்பவன் நல்லவன், தர்மத்திற்கு எதிராக நடப்பவன் கெட்டவன்.
