சீனி மிகவும் ஆபத்தான பொருள்

 

சீனி மிகவும் ஆபத்தான பொருள். உண்மையைச் சொல்வதானால் வெள்ளை சர்க்கரையை (சீனியை) உணவு என்று அழைக்கக் கூடாது. காரணம் வெள்ளை சர்க்கரை நன்மைகளை விடவும் தீமைகளையே அதிகமாக விளைவிக்கின்றன. இதில் உடலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய பல இரசாயனங்கள் கலந்துள்ளன.

Coca-Cola, Pepsi போன்ற குளிர்பானங்களைக் கொண்டு கழிவறைகளைச் சுத்தம் செய்யலாம், இரும்புகளில் உள்ள கறைகளை போக்கலாம். அவற்றில் உடைந்த பல்லை ஊறவைத்து மறுநாள் தட்டினால் பல் தூள் தூளாக நொறுங்கிவிடும்; இப்படி பல வீடியோக்கள் YouTube பில் உள்ளன (தேடிப் பாருங்கள்).

கழிவறைகளிலும், இரும்புகளிலும், தரையிலும் இருக்கும் கறைகளைப் போக்கும் தன்மையை அந்தக் குளிர்பானங்களுக்கு உண்டாக்கியது, அந்தக் குளிர்பானங்களில் கலந்திருக்கும் வெள்ளை சீனிதான். நாம் அருந்தும் ஒவ்வொரு குளிர்பானத்திலும் 20% முதல் 70% வரையில் வெள்ளை சீனி கலக்கப்படுகிறது. அதாவது 10 முதல் 17 டீ கரண்டிகள் அளவு சீனி.

Coca-Cola, Pepsi, Milo, Horlicks, Boost, போன்ற பானங்கள் உடலுக்கு தீங்கானவை என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவ்வாறான பானங்களை அருந்தும் போது, உடலுக்கு தற்காலிக உற்சாகம் உண்டாவது உண்மைதான். ஆனால் அந்த உற்சாகம் உண்டாவதற்கும் காரணம் அவற்றில் கலந்திருக்கும் வெள்ளை சர்க்கரையே. சர்க்கரையில் இருக்கும் சிறிதளவு நல்ல குளுக்கோஸ் உடலுக்குத் தற்காலிக உற்சாகத்தை வழங்குகிறது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கும் இரசாயனங்கள் உடலுக்குத் தீங்கை விளைவிக்கின்றன.

நான் சொல்வதைச் செய்து பாருங்கள் உங்கள் கழிவறையில், கறையாக உள்ள பகுதியை ஈரமாக்கி, அதில் ஒரு கைப்பிடி வெள்ளை சீனியைத் தூவி, ஊறவிட்டு, பின் தேய்த்துப் பாருங்கள். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் கழிவறை கழுவும் மருந்துகளை விடவும் சீனி அதிகப் பலனைத் தரும்.

மனிதர்களின் உடலில் உண்டாகும் பல வகையான நோய்களுக்கு சீனி முக்கிய காரணமாக இருக்கிறது. கரும்புச் சாறு பச்சை வண்ணத்தில் இருக்கும் போது அதிலிருந்து தயாராகும் சீனி மட்டும் எவ்வாறு வெள்ளையாக இருக்கிறது? அதற்குக் காரணம் சீனியில் கலந்திருக்கும் இரசாயனங்கள். பச்சையாக இருக்கும் கரும்புச் சாற்றில் Sulfur Dioxide, Phosphoric Acid, Calcium Hydroxide, Polyacrylamide போன்ற பல இரசாயனப் பொருள் கலக்கப்படுகின்றன.


சர்க்கரையை வெண்மையாக்க, கரும்பு வாடையை நீக்க, தூசிகளைப் பிரிக்க, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, அழகாகக் கட்டம் கட்டமாக அச்சிட, பூச்சிகள் அண்டாமல் இருக்க இப்படிப் பல காரணங்களுக்காக இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.


இந்த இரசாயனங்கள் மனிதனின் ஆரோக்கியத்துக்கு பல வகையான தீங்குகளை உண்டாக்குகின்றன. பற்கள் கறையாவது, பற்கள் சொத்தையாவது, கண் பார்வை மங்குவது, தொண்டை வலி, தோல் நோய்கள், ஆண்மை கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், சிறுநீரகப் பாதிப்புகள், சர்க்கரை நோய், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், இன்னும் எத்தனையோ கெடுதல்களை இந்த இரசாயனங்கள் உண்டாக்குகின்றன.

வெள்ளை சர்க்கரையை தவிர்த்துவிடுங்கள். வெள்ளை சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவு மற்றும் பானங்களை தவிர்த்துவிடுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இயற்கையாகக் கிடைக்கும் பனை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேன் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

To Top