சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது

 

யார் சொன்னாலும் கண்டிப்பாக பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது எனது கருத்து. பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது நம் முன்னோர்கள் வகுத்த சட்டம். காரண காரியங்கள் இன்றி நம் முன்னோர்கள் இந்தத் தடையை உருவாக்கியிருக்க மாட்டார்கள்.

ஆண் பெண் சமத்துவம் பேசுபவர்கள் முதலில் ஆண் பெண் சமத்துவம் என்றால் என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆணுக்கு இயன்ற வேலைகளை ஆண்களும் பெண்களுக்கு இயன்ற வேலைகளை பெண்களும் சமமாக பகிர்ந்து கொண்டு குடும்பமும் சமூகமும் மேன்மைப் பெறச் செய்வதே சமத்துவம். பெண்களால் செய்ய இயலாத காரியங்களையும் செய்யக்கூடாத காரியங்களையும் செய்யப் பணிப்பதே பெண்ணடிமைத் தனம். ஆண்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்தையும் பெண்களும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது முட்டாள் தனம் மட்டுமே.

ஆன்மீகத்தை நான்கு நிலைகளாக வகுத்தார்கள் நம் முன்னோர்கள் அவை சரியை, கிரியை, யோகம், மற்றும் ஞானம். இந்த நான்கு நிலைகளில் பெண்களுக்கு உகந்ததும் மற்றும் எளிதானதும் (சரியை) பக்தி மற்றும் ஞானம். ஐயப்பன் கோயிலுக்கு செல்வது கிரியை மற்றும் யோகத்தைச் சார்ந்தது.

ஆண்கள் ஆன்மீகத்தை அடைய காடு மலைகளில் அலைகிறார்கள், பசி பட்டினியுடன் தவம் செய்கிறார்கள். வெயில், மழை, பசி, தாகம் பார்க்காமல் இறைவனைத் தேடி அலையும் பக்குவம் பெண்களுக்குக் கிடையாது. பெண்கள் அவ்வாறு படைக்கப்படவுமில்லை. பெண்கள் மென்மையாக படைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எது உகந்ததாக இருக்கும் என்று ஆராய்ந்து பக்தி மார்க்கமே பெண்களுக்கு உகந்தது என்று நம் முன்னோர்கள் வகுத்தார்கள்.

ஆன்மீகத்தில் மேன்மையான நிலைகளை அடைந்த பெண்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தில் தங்கள் தேடலைத் தொடங்கியவர்கள் தான். ஆன்மீகத்தில் உயரிய நிலைகளை அடைந்த பெரும்பாலான ஆண்கள் கிரியா யோகத்தைப் பின்பற்றியவர்கள். அனைவருக்கும் அனைத்தும் உகந்தது அல்ல என்பதை பெண்களும் பெண்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் அரசியல்வாதிகளும் புரிந்துக் கொள்ள வேண்டும். அரசியல் வியாபாரிகள் செய்யும் முட்டால் தனங்களுக்குள் புத்திசாலி பெண்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

ஐயப்பன் வழிபாடு என்பது கிரியா யோகம். அதாவது ஆண்களுக்கு மனதையும் உடலையும் பக்குவப்படுத்தும் பயிற்சியாக வடிவமைக்கப்பட்டது தான் ஐயப்பன் வழிபாடு முறைகள். ஐயப்பன் கோயில் என்பது அதைக் கொடு, இதைக் கொடு என்று யாசகம் கேட்கும் இடமல்ல. அது சாதாரண மனிதர்களை மணிகண்டர்களாக மற்றும் பயிற்சி மையம்.

கோயில்களுக்குச் செல்வது, முருகன், சிவன், அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுவது பக்தி யோகமாகும். ஐயப்பனுக்கு மாலை போட்ட நாள் முதலாக ஒழுக்கமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வாழ்ந்து. நாளடைவில் அதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றுவதே ஐயப்பனுக்கு மாலைப் போடுவதன் நோக்கமாகும். ஐயப்பனுக்கு மாலைப் போடுவதை ஏதோ சுற்றுலா செல்வதைப் போன்றும், சாகசங்களைப் புரிவதைப் போன்றும் சிலர் கருதுகிறார்கள்.

ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் ஆண்களுக்குக் கிடைப்பது ஒழுக்கமான வாழ்க்கை முறையும், ஞானமும் ஆன்மீக வளர்ச்சிகளும் மட்டுமே. ஐயப்பனுக்கு மாலைப் போடும் ஆண் பக்தர்கள் கூட இதைப் புரிந்துக் கொள்ளாமல் மாலையைக் கழட்டியவுடன் சிலர் தங்களின் இச்சைகளுக்கு அடிமையாகி மீண்டும் அழுக்கை நோக்கி ஓடுகிறார்கள். இதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதில் ஏதோ உலக ஆதாயம் கிடைக்கும் என்று எண்ணி சில பெண்களும், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆசையில் சில பெண்களும் ஐயப்பனுக்கு மாலைப் போட ஆசைப்படுகிறார்கள். பெண்களுக்கு ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் ஆசையிருந்தால் வீட்டிலேயே செய்யுங்கள் தவறில்லை. ஆனால் இதை ஆணாதிக்கம் என்று வகைப்படுத்துவது மடத்தனமன்றி வேறில்லை.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top