ஜாதியும் கல்வி அரசியலும்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில் தமிழ்நாட்டில் சில இனக்குழுக்களை சார்ந்த மக்களை படிக்கவிடாமல் தடுத்தார்கள். அவர்கள் கூலி வேலைக்கு மட்டுமே செல்லவேண்டும் என்ற எழுதப்படாத சட்டமும் இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன்றும் அது அமலில் இருந்தாலும், திராவிட கட்சிகளின் வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் கல்விக் கிடைக்க காரணமாயிற்று.

இன்று, இருபத்து ஐந்தாம் நூற்றாண்டில் அந்த அடக்குமுறை வேறொரு வடிவம் எடுத்துள்ளது. பள்ளிக்கூடங்களை விட்டு மாணவர்களை துரத்துவதற்கு, பள்ளிக்கூடம், பரீட்சை, மதிப்பெண் போன்றவற்றைக் காரணம் காட்டி என்னால் இயலாது நான் முட்டாள் என்று மாணவர்களே நம்பும் அளவுக்கு அவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இது சாதிய அடக்குமுறையின் ஒரு வகையான அரசியல். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதைப் புரிந்து கொண்டு தெளிவாகச் சிந்தித்து முடிவு எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

இளம் வயதிலேயே உன்னால் முடியாது, உனக்குத் தெரியாது, நீ ஒரு முட்டாள் என்று நம்ப வைக்கப்படும், மீண்டும் மீண்டும் கூறப்படும் சிறுவர் சிறுமிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த மனோதத்துவத்தை (சைகொலஜி) பயன்படுத்தி தான் நம் குழந்தைகளின் மனநிலையைச் சிதைக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

ஒரு தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நினைத்தால் எந்த மாணவனையும் எந்த உயரத்திற்கும் கொண்டு செல்ல முடியும். உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் சகோதர சகோதரிகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்,
மற்றைய எல்லாம் பிற - குறள் 661

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top